தமிழ்நாடு விடுப்பு விதி 7A-ன் கீழ் வழங்கப்பட்டு வரும் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை, வரும் ஒரு வருட காலம் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஈட்டிய விடுப்பை இரண்டு ஆண்டுகள் எடுக்காதவர்கள், அதை தங்களது ஒரு மாத அடிப்படை ஊதியமாக (வருடத்திற்கு 15 நாள் ஊதியம்) பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து, ஈட்டிய விடுப்பு ஊதியம் தொடர்பான விண்ணப்பங்களும், நிலுவைத் தொகை தொடர்பான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அந்த ஒப்புதல் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, விண்ணப்பதாரரின் விடுப்பு கணக்கில் ஈட்டிய விடுப்பு நாட்களாக சேர்க்கப்படும்.
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியலமைப்பு ஆணையங்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ வாரியங்கள்/ நிறுவனங்கள் / என அனைத்து சட்டப்பூர்வ அமைப்புகளுக்கு பொருந்து எனவும் கூறப்பட்டுள்ளது .
அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்: இதற்கிடையே, 12 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 2021 ஜூலை வரை நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தெரிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து உத்திர பிரேதேச அரசு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil