கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்திருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்டமாகக் கூடும் அனைத்து இடங்களையும் மூட மார்ச் 31வரை உத்தரவிட்டுள்ளது.
அதே போல, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்து தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தனது வீட்டின் முன்பு தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிவிப்பு பலகையில், “முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பூ முனெச்சரிக்கை நடாவ்டிக்கையின் பொருட்டு 16.3.2020 முதல் 31.3.2020 வரை பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், அவர்களை கோபிசெட்டிபாளையத்திலும் சென்னையிலும் சந்திக்க வருவதைத் தவிர்த்து பொதுமக்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் இப்படி அறிவிப்பு பலகை வைத்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"