சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டீ கடைகளை நாளை முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், இந்த தளர்வு நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு நேற்று மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டீ கடைகளை மே 11-ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. டீ கடைகளில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். டீ கடைகளின் முன் நின்றோ, அமர்ந்தோ தேநீர் அருந்த அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தளர்வு நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று நேரத்தை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 முதல் அமலில் இருந்து வருகிறது. கடந்த மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர தமிழ்நாடு முழுவதும் கீழ்க்காணும் பணிகள், 11.5.2020 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதே போல, சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில், மே 11-ம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேநீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, தேநீர் குடிக்க அனுமதி இல்லை. இதை நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்காத தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழக அரசு சென்னை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெட்ரோ பங்குகள் இயங்கும் நேரத்தை நீட்டித்து அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் பங்குகல் சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெட்ரோல் பங்குகள் சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று பெட்ரோல் பங்குகளின் நேரத்தை நீட்டித்து அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்று தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் செயல்படும்போது, அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், கிருமிநாசினிகளை பயன்படுத்துவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.