CoronaVirus Tamil Nadu News: கொரோனா டென்ஷனுக்கு இடையே அதில் நடக்கும் அரசியல் காமெடிகள் சற்றே ரிலாக்ஸ் தரக்கூடும். ஈரோட்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை பாராட்டி கடிதம் எழுதியிருப்பதாக மு.க.ஸ்டாலின் மடல் எழுதினார். அந்த ஈரம் காய்வதற்குள், உடன்பிறப்பு ஒருவர் அதிமுக நிவாரண உதவிகளை அள்ளிச் சென்றதாக படம் வைரல் ஆகியிருக்கிறது.
இது தொடர்பான முழுத் தகவல் இங்கே..!
‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் திமுக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் போன் மூலமாக உதவி கேட்கிறவர்களுக்கு, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அல்லது எம்.எல்.ஏ மூலமாக பலசரக்கு உள்ளிட்ட பொருட்கள் உதவியாக வழங்கப்படுகின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் இந்தத் திட்டத்தைப் பாராட்டி ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்பவர் கடிதம் எழுதியிருப்பதாக மே 1-ம் தேதி குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின். அந்தக் கடிதத்தையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டாலின், ‘ #OndrinaivomVaa மூலம் உதவி பெற்ற பல லட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அதிமுக உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. #OndrinaivomVaa என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான். திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்!’ என மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.
மேற்படி கடிதம் எழுதிய கு.தங்கராஜ், உண்மையிலேயே அதிமுக தொண்டரா? என அதிமுக நிர்வாகிகள் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனெனில், ஸ்டாலின் வெளியிட்ட கடிதத்தில் அந்தத் தொண்டரின் முழுமையான முகவரியோ, அதிமுக உறுப்பினர் அட்டையோ, அந்தத் தொண்டரின் படமோ இல்லை. தவிர, தனது உறுப்பினர் அட்டையை கிழித்து போட்டுவிட்டதாகவும் அந்தக் கடிதத்தில் கு.தங்கராஜ் கூறியிருக்கிறார். தங்கராஜ் என்பவர், நிஜமாகவே ஈரோடு நல்லித்தோட்டம் பகுதியில் இருக்கிறாரா? என்றும் விசாரணை நடக்கிறது.
அதிமுக @AIADMKOfficial தரும் நிவாரணத்தை அள்ளி செல்லும் திமுக.
அவ்வளவுதாங்க @arivalayam அரசியல். pic.twitter.com/EVk7KrSyoA— Vinoj P Selvam (@VinojBJP) May 1, 2020
இது ஒருபுறம் இருக்க, அடுத்த நாளான மே 2-ம் தேதி இன்னொரு கூத்து அரங்கேறியிருக்கிறது. ‘தளபதி’ என திமுக.வின் கருப்பு சிவப்பு வண்ணத்தில் பெயர் பொறித்த டூ வீலரில் ஒருவர், ஒன்றுக்கு மூன்று நிவாரணப் பார்சல்களை அள்ளிச் செல்கிறார். அந்த நிவாரணப் பார்சல்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஏதோ, மு.க.ஸ்டாலினே நேரடியாக நிவாரண உதவிகளைப் பெற்றது போல அந்தப் புகைப்படத்தை வைரல் ஆக்கினர். மேலும் விசாரித்தபோது, கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டில் அதிமுக.வினர் வழங்கிய நிவாரண முகாமில் அந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அதிமுக தரப்பில், மேற்படி டூவீலர் பிரமுகரின் பெயரை வெளியிடாமல் ரகசியம் காக்கிறார்கள். ‘நாங்களும் சாதி, மதம், கட்சி பாராமல் உதவுகிறோம்’ என ஸ்டாலின் பாணியிலேயே இவர்களும் டபாய்க்கிறார்கள்.
ஆனாலும் நெட்டிசன்களுக்கு திமுக.வை அட்டாக் செய்ய இது ஒரு வாய்ப்பு. பாஜக மாநில இளைஞரணித் தலைவரான வினோஜ் பி.செல்வம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேற்படி படத்தை பகிர்ந்து, ‘அதிமுக @AIADMKOfficial
தரும் நிவாரணத்தை அள்ளி செல்லும் திமுக. அவ்வளவுதாங்க @arivalayam அரசியல்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
உதவிகள் செய்வதிலும், பெறுவதிலும்தான் எத்தனை அரசியல்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.