Tamilnadu Coronavirus Patient Community Transmission : கடந்த மார்ச் 18ம் தேதி டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 20 வயதுடைய அந்த இளைஞர், தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில், இவருக்கு கொரோன வைரஸ் தொற்று வர காரணம் என்ன? என்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களில் வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளுக்கு இவர் பயணம் செய்யவில்லை என்றும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களோடு இவர் நேரடி இணைப்பில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
"தமிழகத்தில் இருந்து வரும் தகவலை நாங்கள் கூர்மையாக கவனித்து வருகின்றோம், அந்த 20 வயது இளைஞரின் தொற்று குறித்த மருத்துவ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய மருத்துவ ஆய்வு சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக,"இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர பரிசோதனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்" தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஏன் இந்த வழக்கு சிக்கலானது? இந்தியாவில் தற்போது வரை, 283 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பதிவான பெரும்பாலான வழக்குகள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து திரும்பியவர்கள், அல்லது வெளிநாடு சென்று வந்தர்களின் தொடர்பில் இருந்தவர்கள். இதனால், இந்தியாவில் சமூக (உள்ளூர்) அளவிலான கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறப்பட்டது.
மேலும், இந்திய மருத்துவ ஆய்வு சபை நாடு முழுவதும் நடத்திய மாதிரி சோதனையில் சமூக (உள்ளூர்) அளவில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்று கண்டறியப்பட்டது.
கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?
இந்த நிலையில் தான், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று வரக் காரணம் என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இவருக்கு இருக்குமெனில், இவரோடு ரயிலில் பயணித்தவர்களின் நிலை என்ன? முதலில், எங்கிருந்து இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது? அவர்களின் தற்போதைய நிலை என்ன? போன்ற கேள்விகள் இருக்கும் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil