Coronavirus Quarantined diamond princess cruise ship : ஜப்பானின் யோகோஹமா கடற்கரையில் பிப்ரவரி 5ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது டையமண்ட் பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல். ஜனவரி 20ம் தேதி ஹாங்காங்கில் தரையிறங்கிய சீன பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பிப்ரவரி 2ம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கப்பலில் உள்ள 3700 நபர்களை தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் 160க்கும் மேற்பட்ட இந்தியர்களும் அதில் 6 தமிழர்களும் உள்ளனர். “எங்களில் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை. நாங்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும். எங்களை எப்படியேனும் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மதுரையை சேர்ந்த அன்பழகன். இந்த கப்பலின் சிறப்பு மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார் அன்பழகன். இவருடன் சென்னையை சேர்ந்த டேனியல், திருச்சியை சேர்ந்த முத்துசாமி ஆகியோர் இந்த கப்பலில் உள்ளனர். இதற்கு முன்பு அந்த கப்பலில் பணியாற்றும் சமையற்கலைஞர் பினாய் குமார் சர்கார் வெளியிட்ட வீடியோவில் தங்களை காப்பாற்றும் படி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் படிக்க : மோடி எங்களை காப்பாற்றுங்கள்! கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்!
இந்தியர்கள் சிலருக்கும் உடல்நிலை சரியில்லை
கப்பலில் இருக்கும் நபர்களில் 130 நபர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும், சில இந்தியர்களுக்கு உடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அறிவித்தார் பினாய். ஆனாலும் அவர்களை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்று அறீவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் வேலை பார்க்க உதவிய ஏஜென்சியிடம் உதவிகள் கேட்கப்பட்டுள்ளது என்றும் பிப்ரவரி 20ம் தேதிக்குள் வீடு திரும்புவோம் என்றும் பினய் குமார் அறிவித்துள்ளார்.
இந்தியர்களை இந்த கப்பலில் இருந்து வெளியேற்றுவது குறித்து இந்திய அரசும் ஜப்பான் அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கப்பற்துறை பொது இயக்குநரக அதிகாரி கூறுகையில், பயணிகள் அனைவரும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் அங்கே வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனநிலை நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு முறையாக கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"