புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கல்வி கட்டணத்தை குறைக்கும்படி உத்தரவிட்டும் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பல்கலைக்கழகத்தின் மீதும் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளதாக விழுப்புரம் வி.சி.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, மத்தியப் பல்கலைக் கழகங்களில் முன்னணி இடத்தில் இருந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஊழல் மற்றும் அதை மறைக்க எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் தேசிய தரவரிசைப் பட்டியலில் 68-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. தற்போதைய துணைவேந்தர், யுஜிசி விதிகளை மீறி 86 ஆசிரியர்களையும், 54 ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் பணியமர்த்தியுள்ளார். பணி நியமனத்தில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு, அதற்கு எதிராகப் பேசிய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வி கட்டணம் குறைக்கப்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், துணைவேந்தரின் பதவிக் காலத்தை அரசு நீட்டித்துள்ளது. இந்த நிலைமை ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலனைப் பாதிப்பதாக உள்ளது, மேலும் இந்த பிரச்சினைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாணவர்களின் நலன் மிகவும் முக்கியமானது, பல்கலைக்கழகம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“