மதுரை ஹச்.எம்.எஸ் காலனி சேர்ந்த கவிதா என்பவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் குடியிருந்தபோது விரோதம் காரணமாக தாக்கப்பட்டார். அது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மற்ற இருவரையும் கைது செய்ய ஜெய்ஹிந்த் பிற காவல் நிலையத்தில் பணி புரியும் உதவி சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தயங்கிய கவிதாவிடம் 70 ஆயிரம் ஆவது தருமாறு கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் கவிதா புகார் செய்தார். நேற்று மாலை ரூ.30 ஆயிரம் தயாராக இருப்பதாக உதவி சார்பு ஆய்வாளருக்கு கவிதா தகவல் தெரிவித்துள்ளார்.
சூர்யா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சீருடை அணிந்து டூவீலரில் புறப்பட்ட உதவி ஆய்வாளர் சண்முகநாதன், புதுார் பேருந்து பணிமனை அருகே லஞ்சப் பணத்தை வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் வைத்த போது அங்கு மறைவாக இருந்த டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூரியகலா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தகவல் அறிந்த மதுரை கமிஷனர் லோகநாதன் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை 'சஸ்பெண்ட்' செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.