உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் காவிரி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்டேவுடன் தமிழக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பொதுப்பணி செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், நாப்டேவுடன் சந்தித்து பேசினார். காவிரி வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதை அடுத்து மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வழக்கு தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அதிகாரிகள் டெல்லியில் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.