அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலக்கத்துறையினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 பேரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இன்று நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞருடன் ஆஜரானார். இதேபோல், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் இன்று ஆஜராகி இருந்தனர்.
அதன்பேரில், இன்றைய தினம் விசாரணை நடைபெற்றது. இதில், செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "இந்த வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கான தகவல்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதேபோல், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக தலா ரூ. 2 லட்சத்தை செலுத்த வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டது.