/tamil-ie/media/media_files/uploads/2022/01/noname-1.png)
admk minister rajendra balaji
ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை, டிசம்பர் 17 ஆம் தேதி முதல் காவல் துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் ராஜேந்திர பாலாஜி இருக்கலாம் என கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தினர்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகவில் ஹசன் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விருதுநகர் போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
பின்னர், விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்றிரவு அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விடிய விடிய பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, இன்று காலை ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பரம்வீர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிபதியிடம் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், கைது நடவடிக்கையை கைவிடுமாறும் ராஜேந்திரபாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாக கூறப்படுகிறது.
வாதத்தை கேட்ட நீதிபதி, 20 நாட்கள் ஏன் வெளியே இருந்தீர்கள் என ராஜேந்திரபாலாஜியிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, வரும் ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், மதுரை சிறைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.