சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்ப சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா மீது, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக, சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பைனான்சியர் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததால், ஜார்ஜ் டவுன் கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இவர் தொடர்ந்த அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, ஜார்ஜ்டவுன் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும் ரஜினி ஆஜராக உத்தரவிடலாம் எனவும் அறிவுறுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஜார்ஜ்டவுன் கோர்ட்டு, போத்ராவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்ப ஜார்ஜ்டவுன் கோர்ட்டு நீதிபதி பஷீர் உத்தரவிட்டுள்ளார்.