ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மின்சார ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகிய இரண்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

அந்த மனுக்களில் ஊதிய சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக TANGEDCO நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரக்கூடிய நிலையில், இப்போது இந்த போராட்டம் அறிவித்திருப்பது என்பது, சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுடைய பாதிப்பு, TANGEDCO வின் உடைய நிதிநிலை எதிர்வரக்கூடிய பொங்கல் பண்டிகையை கருத்தில் கொள்ளாமல் இந்த போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்த போராட்டத்திற்கு தடை விதிக்காவிட்டால் சமுதாயம் ஸ்தம்பித்துவிடும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரதம் சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தொழில் தகராறு சட்டத்தின் படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு வேலைநிறுத்த போராட்டம் நடத்தமுடியாது என்பதால், இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், சட்டப்படி வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆறு வாரத்திற்கு முன்கூட்டியே அறிக்கையானது வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் முன்வைத்த வாதம் என்னவென்றால், “மின்வாரிய ஊழியர்களின் பேச்சுவார்த்தை என்பது, இன்று காலை தொடங்கியிருக்கிறது. இந்த அறிவிப்பை கடந்த 5ம் தேதி அனுப்பிய போதே, தொழிற்சங்கங்கள் போராட்டத்தை நடத்துவது என்பது சட்டவிரோதமானது என்றும், மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடு, பள்ளி- கல்லூரிகளின் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கும் என்பதால், இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் வாதித்தார்.
அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், மின்சார வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெறக்கூடிய நேரத்தில் அதனுடைய முடிவுகளை தெரிந்துகொள்வதற்கு முன்பாக வேலை நிறுத்தம் செய்வது என்பது சட்டவிரோதமானது என்றும் கூறி, இந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்கவேண்டும் என்றும் அரசு தரப்புக்கும், நீதிபதிகள் அறிவுறுத்திருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil