கேள்வி தாள் குளறுபடி, வெளிப்படைதன்மை இல்லாமல் நடைபெற்ற குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த மார்ச் மாதம் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ”9050 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எந்தத் தகவலும் தரப்படவில்லை. கட் -ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறனவை. மேலும் தேர்வுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என டி.என்.பி.எஸ்.சி-க்கு கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் கோரிக்கையை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. எனவே, குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பதில் தர முடியாத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது எனவும், ஜுடீசியல் ஆக்டிவிஷம் என்ற கேள்வி கேட்கபட்டுள்ளது. அப்படி என்றால் என்ன? இந்த ஒரு கேள்வியே தவறான கேள்விகள் என்பதற்கு போதுமானது. இந்த கேள்விக்கு என்ன பதில் தர முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டார்.மேலும், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
டி.என்.எஸ்.சி'யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் -1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் மிக கடுமையான நிலையை நீதிமன்றம் எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து மனு தொடர்பாக ஜூன் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி'க்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய துணை செயலாளர் தாரா பாய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த பதில் மனுவில், தேர்வாணயம் வெளியிட்ட மாதிரி விடைதாளில் இருந்த 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் அளித்துள்ளதாக 4,390 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்வாணையத்திற்கு புகார் மனுகள் வந்ததாகவும், அதன் அடிப்படையில், கேள்விகள் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை தேர்வாணயம் அமைத்தாகவும், குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் படி மாதிரி விடைத்தாளில் கேட்கப்பட்ட 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது என அந்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டது.
மேலும் நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது எனவும், இது போன்ற அரசு பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிட கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன் அடிப்படையில் தற்போது வெளியிட முடியாது என டி.என்.பி.எஸ்.சி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டது.
இதனையடுத்து பதில் மனு தொடர்பாக மனுதரார் தங்களின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.