கோவையில் கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று கிடக்கும் இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்த சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்தான விசாரணையில் தற்பொழுது வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விசாரணை தற்போது NIA விற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அதன்படி கோவை மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் கார்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேட்பாரற்று நிற்கும் கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காவல்துறையினர் அந்த கார்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து போலிசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் உக்கடம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப் கடைகளிலும் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் காவல்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil