பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 10 மணி அளவில் கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ மருத்துவக் காப்பீடு மற்றும் பி.எப் பலன்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்தனர். மேலும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்துள்ளதால் மாநகரில் இன்று குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன.