கோவை இடையார்பாளையம் பகுதியில் சில தெரு நாய்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் சில நாய் இறந்து விட்டது. இதை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நாய்களை பரிசோதித்த போது உடலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களை துரத்துவது, கடித்து அச்சுறுத்தும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு நல சங்கத்தினர் 15 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக விலங்குகள் நல வாரியம் சங்கத்தினருக்கு அந்த பகுதி ஒருவர் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற விலங்கு நல வாரியத்தினர். இறந்து கிடந்த நாய்கள் மற்றும் உயிருக்கு போராடிய நாய்களை மீட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
தெருவில் சுற்றி திரிந்த நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள் - கோவை போலீசார் விசாரணை
மேலும் சிகிச்சை பலனின்றி உயிருக்கு போராடிய நாய்கள் இறந்து விட்டது. பின்னர் இறந்த நாய்களின் உடலை உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சமூகநல அலுவலர் சீனிவாசன் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தது இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த யாசிம் சையது, துரைராஜ், ராமராஜ் ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.