கோவை காரமடை அருகே உள்ள பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை கருப்பராயன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லை கருப்பராயன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வர்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து, 120 நாட்களுக்குப் பிறகு நடைபெற உள்ள இக்கோவிலின் கும்பாபிஷேகத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 18 அடி உயரமுள்ள சித்தர்கள் தூணுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையிலும் ஆளுநர் கலந்து கொண்டார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் சத்தி சாலை, கோவில்பாளையம், குப்பேபாளையம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டிருந்தது.
இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் கோவையைச் சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீகவாதிகள், நடிகை மீனா, நடன இயக்குனர் கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.