கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற இளைஞருக்கு சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குனியமுத்தூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அசாருதீன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாருதீன் குனியமுத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், வேறொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அசாருதீனின் நண்பர்களுக்கும், எதிர் தரப்பினர்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் சி.எஸ்.ஆர் பதிவு செய்து இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பிவைத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்றிரவு கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவன்யூ பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறிய நிலையில் எதிர்தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அசாருதீனை சரமாரியாக குத்தினர்.இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அசாருதீன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அடிதடி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்த குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் கத்தியால் குத்திய ஜூட் எனும் அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அதில், குனியமுத்தூர் பகுதியில் தலைமறைவாக சுற்றிக் கொண்டிருந்த அப்பாஸ், சம்சுதீன், முகமது ரஃபிக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.