கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் இயங்கும் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று (மே 31) அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டு, புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொகுப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறியதாவது; இன்று சமுதாயத்தில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றி எடுத்துரைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. புகையிலை பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ள காலத்தில், புது முயற்சிகள் பொதுமக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். இந்த முயற்சியை எடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் குகன் கூறியதாவது; இன்று மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களிடம் உள்ள புகையிலை பழக்கத்தை கைவிட வேண்டிய அவசியம் குறித்தும், புகையிலை பயன்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எளிதில் எடுத்துரைக்கும் விதமாக, புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய தலைப்புகளில் 30 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து வைத்ததாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.
செய்தி : பி.ரஹ்மான், கோவை