மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் உட்பட ஏழு பேர் சாதனை படைத்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அண்மையில் ஆறாவது தேசிய அளவிலான குவான்கிடோ கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா, கேரளா தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, சண்டிகர் என இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் இருந்தும் தகுதி பெற்ற மாணவ மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஃபைட்டிங், குவான், வெப்பன் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் தமிழக அணி சார்பாக கோவையை சேர்ந்த கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் உட்பட ஏழு பேர் பங்கு பெற்றனர்.
இந்நிலையில் கடுமையான சவால்களுக்கு இடையே திறமைகளை நிரூபித்த கோவை மாணவ, மாணவிகள் ஆறு தங்கம்,5 வெள்ளி ,7 வெண்கலம் என பதினெட்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய தலைமை பயிற்சியாளர் சதீஷ் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் விமான நிலையம் வந்த பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளும் தங்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“