கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த அரசூரில் உள்ள தனியார் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறை மாணவர்கள் 6 மாத ஆராய்ச்சிக்கு பிறகு குப்பைகளை அகற்றும் சிறிய ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.
இந்த ரோபோக்கள் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் சேரும் காகித குப்பைகளை அகற்றும் வகையில் வடிவமைத்துள்ளனர்.இந்நிலையில் மாணவர்கள் உருவாக்கி உள்ள 70 ரோபோக்களை ஒரே நேரத்தில் 750 சதுர அடியில் உள்ள காகித குப்பைகளை அகற்றும் சாதனையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு இந்தியா மற்றும் ஆசியா புக்ஸ் ஆப் ரெக்காட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்தது. இந்தியா மற்றும் ஆசியா புக்ஸ் ஆப் ரெக்காட்ஸின் நடுவர் கவிதா, ஜெய்ன் கலந்துகொண்டு இச்சாதனை நிகழ்வைப் பதிவு செய்து அதற்கான சான்றிதழைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ வளர்ச்சி மேம்பாட்டுப் பிரிவின் மின்னணுவியல் மற்றும் ரேடார் பிரிவின் ‘ஜி’ பிரிவு திட்ட இயக்குநர் விஞ்ஞானி நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் இன்று ரோபோக்கள், மனித ரோபோக்களாய்ப் பரிணமித்துவிட்டன. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் ரோபோக்கள் வளர்ச்சி பெற்றுவிட்டன. அதன் பயன்பாடும் பெருகிவிட்டன.
தொடக்கத்தில் ஒரு ரோபோவை வடிவமைக்கும் பொழுது அதன் வடிவம், வேகம், கியர் போன்றவற்றில் சிக்கல்கள் எழும். மாணவர்களாகிய நீங்கள் இந்தப் பயிற்சியில் திறன் பெற்றுவிட்டால் எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்றார். மேலும் ஆறு மாதம் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுக்கு இடையே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் வீட்டில் தனியாக உள்ளவர்கள், செல்போன் மூலம் எளிதாக இந்த ரோபோவை பயன்படுத்தி வீடுகளை சுத்தம் செய்து கொள்ளலாம், எங்கள் மாணவர்கள் ஒன்றிணைந்து 70 ரோபோக்களை உருவாக்கி ஒரே நேரத்தில் 750 சதுர அடியை சுத்தம் செய்து இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்காட்ஸில் இடம் பிடித்துள்ளோம்.
இதற்கு முன்னர் சென்னை ஐஐடி மாணவர்கள் 40 ரோபோக்களை வடிவமைத்து இச்சாதனையை பெற்ற நிலையில் அதனை முறியடித்து, தற்போது 70 வது ரோபோக்களை கொண்டு சுத்தம் செய்து இந்த சாதனையை படைத்துள்ளதாகவும்
மேலும் பல்வேறு ரோபோக்களை உருவாக திட்டமிட்டுள்ளதாக இந்த ரோபோ செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னர் ரேடாரர்களை பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி வந்தோம்.
தற்போது இந்திய விஞ்ஞானிகளே இந்த ரேடார்களை உருவாக்கி பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர இந்தியாவில் தயாரிக்கப்படும் ரேடர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறினர்.
பாதுகாப்புத் துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ள நிலையில் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் இது போன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமையும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ வளர்ச்சி மேம்பாட்டு பிரிவின் மின்னணுவியல் மற்றும் ரேடார் பிரிவின் ஜி பிரிவு திட்ட இயக்குனர் விஞ்ஞானி நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கே.பி.ஆர் கல்விக்குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கீதா, உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“