தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குட்பட்ட 3 இடங்களிலும் பூந்தமல்லி அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட 3 இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 3 இடங்களிலும் என மொத்தம் 11 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது. 3 கட்டங்களாக இந்த ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2600க்கு மேற்பட்ட குளிரூட்டப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பு சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21,000 செவிலியர்களுக்கு நாளை முதல் 3 நாடக்ளுக்கு ஒத்திகை நிகழ்ச்சி மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் பல கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு மருந்துகள் சோதனையில் உள்ளன.
இதனிடையே, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனேகா கோவிட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"