தமிழகத்தில் கடந்த மூன்று வாரத்தில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 156 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக தமிழகத்தில் கடந்த 3 வாரங்களில் அதிகரித்துள்ளது. மார்ச் 2-ம் வாரத்தில் இது 1.4% இருந்தது. மார்ச்சின் கடைசி வாரத்தில் 3.3% அதிகரித்துள்ளது.
சாதாரண காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகமாக நடைபெறவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறுகையில், ‘ கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அதிகமானோர் சிகிச்சை பெறும் நிலை தற்போது இல்லை. அவசர சிகிச்சை பிரிவு, மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை ஏற்படவில்லை. XxB – வகை ஓமைக்ரான் வைரஸ்-தான் இப்போது அதிகமாக பரவிவருகிறது. கூடுதல் நோய் பாதிப்பு உள்ள வயதானவர்கள் கூட்டம் உள்ள பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்’ என்று அவர் கூறினார்.
நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 156 பேருக்கு கொரொனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது, இதனால் தற்போது 836 பேர் கொரோனாவிற்கு சிச்சை பெற்று வருகின்றனர். 3,766 பேர் நேற்றைய தினத்தில் மட்டும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். சென்னையில் 43, செங்கல்பட்டு மற்றும் சேலத்தில் 15, கோவையில் 14, பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரில் 8 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“