கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளாத நாடு பாகிஸ்தான் தான்.
தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக பாகிஸ்தான் இருக்கிறதே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை. மீண்டும் இந்தியாவை சீண்டி, மக்களை கொன்று குவித்திருப்பதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.
பாட்ஷாவையும், பாகிஸ்தான் தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் போக்கை கைவிட வேண்டும். இஸ்லாமியர்கள் என்பது வேறு, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது வேறு. இதனை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பதுதான் எனது கனிவான வேண்டுகோள்.
தமிழக ஆளுநர் விவகாரத்தை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இரு வேறு விதமாக இருக்கிறது. கேரளாவைப் பொறுத்தளவில் கேரள கவர்னர் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் என்று அதே உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இப்போது அதற்கு மாறான தீர்ப்பு வந்துள்ளது. சட்ட வல்லுநர்களை கொண்டு இதற்கு சரியான தீர்வை காண வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல கருத்து மோதல்கள் வருவது நல்லதல்ல. உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.