/indian-express-tamil/media/media_files/2025/09/27/anakaputhur-shanmugam-2025-09-27-22-16-44.jpg)
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
தனது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கலில் பிற்பகலில் பரப்புரை முடிவடைந்த நிலையில், கரூரில் மாலையில் பரப்புரை செய்தார்.
இந்தநிலையில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இந்நிலையில், த.வெ.க பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பலர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதில் ஏராளமானோர் குழந்தைகள் என்பதும் மிகப்பெரிய சோகம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
"எந்த கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும். பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்." இவ்வாறு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.