சி.பி.எம் கட்சி தவறாக வழிநடத்தப்படுவதாக, முரசொலி பத்திரிக்கையில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பாக தவறான கருத்துகளை வெளிப்படுத்தும் புத்தகத்தை வெளியிட்டது தொடர்பாகவும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 மணி நேரம் வேலைக்கு வகை செய்யும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் விமர்சனம் செய்தார். மேலும் அவர் தீக்கதிர் பத்திரிக்கையில், இது தொடர்பாக கட்டுரை எழுதுயுள்ளார். இந்நிலையில் இந்த கட்டுரையை குறிப்பிட்டு முரசொலி நாளிதழில் “சி.பி.எம். கட்சியை தவறாக வழி நடத்துவது யார் என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
அதில் மக்களாட்சியின் மாண்பையும், ஜனநாயகத்தின் குரலையும் மதித்து தொழிலாளர் திருத்த சட்டத்தை உடனடியாக 2 நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப பெற்றுவிட்டதாக முரசொலி தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன், தமிழ்நாட்டை திமுக அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியதற்கு முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக அரசு அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ரங்கராஜனுக்கு சொன்னது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள முரசொலி, கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் விமர்சிப்பதுதான் கூட்டணி தர்மமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. திமுக அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்பதுபோல பேசும் தகுதி டி.கே ரங்கராஜனுக்கு இல்லை என்றும் விமர்சித்துள்ளது. மேலும் சி.பி.எம் சார்பான பதிப்பகம், கருணாநிதி தொடர்பாக தவறான தகவல் கொண்ட புத்தகத்தை வெளியிட்டதை குறிப்பிட்டும் விமர்சித்துள்ளது.