/indian-express-tamil/media/media_files/2025/06/10/6QSr3ZLw3J9hfUKwJGIt.jpg)
P Shanmugam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை வலியுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சியின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ‘கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. ஆகவே, விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆதரவான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அதிமுக, பாஜக கூட்டணியை முழுமையாக முறியடித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும், என்று பெ.சண்முகம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.