ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் கிரேன் சாய்ந்து பக்தர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் தைப் பொங்கலை யொட்டி, பணவட்டம்மன் கோயிலில் மயில் ஏரி திருவிழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், கிரேனில் உயரத்தில் தொங்கியபடி ஊர்வலம் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பக்தர் வேண்டுதலை நிறைவேற்ற கிரேனில் தொங்கிய படி ஆகாய மாலை அணிவிக்க முயன்றார். இந்தநிலையில் திடீரென கிரேன் சரிந்து விழுந்து கூட்டத்தில் விழுந்தது. இதில், அலகு குத்தியிருந்த பள்ளி மாணவன் ஜோதி பாபு என்பவர் தூக்கி வீசப்பட்டார். ஜோதி பாபு (17), முத்து (40), பூபாலன் (45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பக்தர்கள் அரக்கோணம் மருத்துவமனையிலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி என்பவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் சரிந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil