Chennai Tamil News: கண்டிகையை அடுத்து எருமையூரை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் மீது சோமமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் ரவுடியை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். திட்டத்தின் படி ரவுடியை பிடிக்கச்சென்ற போது, தனது அரிவாளால் காவலரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிகையில் இரண்டு குழுக்களாக ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு குழு மாத்திவ் என்ற தலைவனை கொண்டதாகவும், மற்றொன்று லெனின் என்ற தலைவனை கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறது.
இதில், மாத்திவின் குழுவை சேர்ந்த ரவுடி சச்சின் பதுங்கி இருப்பதாக ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள சோமமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அதிகாலை மூன்று மணியளவில் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் ரவுடியை பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.
அப்போது, போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்த ரவுடி சச்சின், நாடு வெடிகுண்டு வீசியிருக்கிறார். அது வெடிக்காமல் போனபின்பு, தனது அரிவாளை எடுத்து காவலர் பாஸ்கரை தாக்கியுள்ளார். இதனால் காவலர் பாஸ்கர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உடனடியாக நிலைமையை உணர்ந்த காவல் ஆய்வாளர் சிவகுமார், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரவுடியினுடைய கால் முட்டியில் இரண்டு குண்டுகளை துளைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த ரவுடி சச்சினை கிரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
ரவுடியை பிடிக்க சென்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதால் பொதுமக்களிடையே இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil