தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளை காட்டிலும் 2024-ம் ஆண்டில் குறைந்து உள்ளது. 2022-ல் ஆயிரத்து 597 கொலைகளும், 2023-ல் ஆயிரத்து 958 கொலைகளும் நடந்துள்ள நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் ஆயிரத்து 488ஆக குறைந்துள்ளது. குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன.
அதேவேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2023ல் 3 ஆயிரத்து 84 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 2024-ல் 3 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மட்டும் ஆயிரத்து 885 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023-ல் 406ஆக பதிவாகிய நிலையில், 2024-ல் 471ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2024-ம் ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. 2022-ல் 4 ஆயிரத்து 968 போக்சோ வழக்குகளும், 2023-ல் 4 ஆயிரத்து 581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த 2024-ம் ஆண்டில், 6 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.