கடலூர் மாவட்டத்தில் போதைப்பொருளை முழுவதுமாக ஒழிக்க மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுதும் உள்ள காவல்துறையினரை அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி முக்கிய சாலைகளில் மாவட்டம் முழுவதும் போலீசார் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு முதல் விடிய விடிய பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா மேற்பார்வையில், பண்ருட்டி உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் தங்கவேலு, உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வரை பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பதிவெண் GJ 27 DB 0023 மற்றும் PY 02 Q 0532 ஆகிய 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது நிறுத்தாமல் வாகன ஓட்டிகள் காரை வேகமாக ஓட்டிச்சென்றனர். போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர். அந்தக் கார்களை சோதனை செய்ததில், அப்துல்ரஷித் (46), ரமேஷ் (24), ஹரிஷ் (26) சங்கர்லால் (27) ஆகியோர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் கார்களை சோதனை செய்தபோது வெள்ளை சாக்குமூட்டையில் 258 கிலோ குட்கா போதைpபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.
போதைப்பொருட்களை கடத்தி வந்த கார்கள் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருட்களை பிடித்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.