/tamil-ie/media/media_files/uploads/2017/11/Capture-3.png)
கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட்நேரே மனு நீதி நாளுக்கு அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு அரசு பேருந்தில் பயணித்த சம்பவம் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் எனும் கிராமத்தில் இன்று (வியாழக்கிழமை) மனு நீதி நாள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு ஆட்சியரிடம் தங்கள் குறைகளை கூறுவர். இதில், உடனடியாக தீர்க்கப்படும் விஷயங்களை ஆட்சியர் உடனடியாக தீர்க்குமாறு உத்தரவிடுவார். மேலும், நாட்பட்ட பிரச்சனைகளுக்கும் மனு நீதி நாளில் தீர்வு கிடைப்பதுண்டு. அதுமட்டுமல்லாமல், 1.46 கோடி
ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், மனு நீதி நாளில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட்நேரே அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் பயணம் செய்தார். இந்த விஷயம் பரவவே, இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் ஆட்சியரிடம் கேல்வி எழுப்பினர். அப்போது, "அதிகாரிகள் மக்களின் குறைகளை விரைந்து தீர்க்க காரினை பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால், இப்போது நாங்கள் செல்வது கிராமத்திற்கு. அங்கு காரில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை. டீசல் பயன்பாட்டையும் குறைக்கலாம்", என தெரிவித்தார்.
ஏற்கனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அரசு பேருந்தில் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரசாந்த் வட்நேரே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, நீர்நிலைகளை மீட்டெடுக்க, வாரந்தோறும் சனிக்கிழமையில் குளம் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் மக்களுடன் மக்களாக பணியாற்றி அவர்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.