புதுச்சேரி மாநிலம் உத்திர பாளையம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் (36), கஞ்சா விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார். கடலூர், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தனது முக்கியத் தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வந்த தமிழரசனை, காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அவர்களின் உத்தரவின் பேரிலும், தமிழரசன் தற்போது போதைப்பொருள் தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29, 2025 அன்று, காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் பிற காவலர்கள் அடங்கிய குழுவினர், அனுமந்தை டோல்கேட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காரில் சுமார் 2.25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழரசனின் தொடர்ச்சியான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவர் இன்று போதைப்பொருள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.