/indian-express-tamil/media/media_files/2025/10/13/cuddalore-online-lottery-arrest-2025-10-13-18-43-36.jpg)
கடலூரில் நடந்த லாட்டரி வேட்டை: 4 பேர் கைது; ரூ.23 லட்சம் பறிமுதல் - குற்றவாளிகளுக்கு உதவிய 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
கடலூரில், வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த 4 பேரை மாவட்டக் காவல்துறை மடக்கிப் பிடித்தது. குற்றவாளிகளுக்கு உதவிய 4 காவலர்கள் மீது எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் மேற்பார்வையில், கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
லாட்டரி விற்பனை செய்யும் நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், போலீசார் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரி பின்புறமுள்ள கேட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரைச் சுற்றி வளைத்தனர். அவர்களை சோதனை செய்ததில், இவர்கள் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:
ஜெயராமன் (வயது 62), த/பெ செங்கல்வராயன், சப்தகிரி நகர், குண்டுஉப்பலவாடி.
சாரதி (வயது 29), த/பெ ஜெயராமன், சப்தகிரி நகர், குண்டுஉப்பலவாடி.
மல்லிகா (வயது 55), க/பெ ஜெயராமன், சப்தகிரி நகர், குண்டுஉப்பலவாடி.
பிரகாஷ் (வயது 44), த/பெ வேலு, இரட்டைபிள்ளையார் கோவில் தெரு, புதுப்பாளையம்.
அவர்களிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்குப் பயன்படுத்திய 5 செல்போன்கள், ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22,94,500 (22 லட்சத்து 94 ஆயிரத்து 500), தங்கம் லாட்டரி சீட்டுகள் – 10, நல்லநேரம் லாட்டரி சீட்டுகள் – 10 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குpபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஜெயராமன் மீது ஏற்கனவே 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் என்பவர் மீது 3 லாட்டரி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், லாட்டரி விற்பனையில் அவர்களுக்கு உதவி செய்த சில காவலர்கள் குறித்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதனை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டு, சம்பந்தப்பட்ட 4 காவலர்களை ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர்களின் விவரம்:
காங்கேயன் (கடலூர் துறைமுகம் காவல் நிலையம்)
மணிகண்டன் (கம்மாபுரம் காவல் நிலையம்)
தீனதயாளன் (நடுவீரப்பட்டு காவல் நிலையம்)
முத்துக்குமாரன் (கடலூர் புதுநகர் காவல் நிலையத் தனிப் பிரிவு காவலர்)
ஆன்லைன் லாட்டரி குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார். மேலும், மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.