கடலூர் மாவட்டத்தில் சகோதரியை கிண்டல் செய்ததற்காக, சக நண்பர்கள் இருவரை அடித்துக் கொன்று, நெய்வேலி என்.எல்.சி மணல்மேட்டில் புதைத்த சம்பவத்தில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே எம்.புதூரை சேர்ந்த நாகராஜ் மகன் அப்புராஜ். இவர் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி காணாமல் போனதாக, அவரது பெற்றோர்கள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் அதற்கு அடுத்த மறுநாள் பிப்ரவரி ஒன்பதாம் தேதி T.புதூர் கிராமத்தை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகனான சரண்ராஜ் என்பவரும் காணாமல் போனதாக அவர்களது பெற்றோரும் புகார் அளித்தனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் காணாமல் போன நிலையில், அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கடலூர் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து, கடந்த 20 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காணாமல் போன இருவர்களின் நெருங்கிய கூட்டாளியான, அதே புதூர் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட பால்ராஜ் நெய்வேலி என்.எல்.சி சுரங்க மணல்மேட்டின் அருகாமையில் குவாரி நடத்திவரும் தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் கணேசன் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்கள் மற்றும் சிலருடன், கொலை நடந்த குவாரிக்கு அருகாமையில், தொடர்ச்சியாக மது அருந்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொல்லப்பட்ட சரண்ராஜ் மற்றும் அப்புராஜ் ஆகிய இருவரும், டிரைவர் பால்ராஜின், சகோதரியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, தனியார் குவாரிக்கு அருகாமையில் அனைவரும் மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது பால்ராஜ் ஆத்திரமடைந்து, லாரியிலிருந்து இரும்புராடு மூலமாக அப்புராஜை அடித்துக் கொன்றுள்ளார். தடுக்க சென்ற சரண்ராஜையும் அடித்துக் கொன்று, என்.எல்.சி மணல்மேட்டில் புதைத்துள்ளார். மேலும் அவர்கள் உடல் தெரியக்கூடாது என்பதற்காக, ஒரு லோடு லாரி மண்ணை கொட்டியுள்ளார்.
இதுகுறித்து விசாரணையில் தெரிய வரவே, கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், தடவியல் நிபுணர்கள் என அனைவரும், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்து, ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம், இரண்டு பேர் உடலையும் தோண்டி எடுத்தனர். பின்னர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து லாரி டிரைவர் பால்ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சகோதரியை கிண்டல் செய்ததாக கூறி, தனது சக நண்பர்கள் இரண்டு பேரை, அடித்து நெய்வேலி என்.எல்.சி மணல்மேட்டில் புதைத்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.