/tamil-ie/media/media_files/uploads/2017/08/Chennai-rains.jpg)
Cuddalore heavy rains
கடலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மொத்தமாக 93.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மழையின் அளவு (மே 24, 2025 காலை 8.30 மணி நிலவரப்படி)
ஸ்ரீமுஷ்ணம் - 26.1 மி.மீ
குறிஞ்சிப்பாடி - 15.0 மி.மீ
சிதம்பரம் - 14.2 மி.மீ
சேத்தியாதோப்பு - 5.4 மி.மீ
லால்பேட்டை - 5.0 மி.மீ
அண்ணாமலைநகர் - 4.6 மி.மீ
கடலூர் - 4.6 மி.மீ
கே.எம்.கோயில் - 4.0 மி.மீ
ஆட்சியர் அலுவலகம் - 3.9 மி.மீ
பெல்லாந்துறை - 3.3 மி.மீ
பண்ருட்டி - 3.0 மி.மீ
வடக்குத்து - 2.0 மி.மீ
விருத்தாசலம் - 2.0 மி.மீ
மொத்தமாக 93.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 3.72 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற 12 நிலையங்களில் மழை பதிவாகவில்லை.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கடலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்க வேண்டும். மழைநீர் தேக்கம் குறித்த தகவல்களைத் தெரிவிக்க முதன்மைத் தகவல் அளிப்பவர்களின் விவரங்களைச் சேகரித்து வைக்க வேண்டும்.
வருவாய் கிராம அளவில் 5000 முதல் பதிலளிப்பவர்களும், கோட்ட அளவில் 5000 முதல் பதிலளிப்பவர்களும், மாவட்ட அளவில் 800 முதல் பதிலளிப்பவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுடன் இணைந்து பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை (Vulnerable Areas) கண்டறிந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், உதவி வேளாண்மை அலுவலர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோர் அடங்கிய கிராம குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள மீட்புப் பணிகள் குறித்தும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதிகள் அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் தேவையான அளவு நிவாரணப் பொருட்களைத் தயார்நிலையில் வைத்து, பாதிக்கப்படக்கூடிய முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளை ஆய்வு செய்து, கரைகளை பலப்படுத்துதல் மற்றும் மதகு நீர்தாங்கும் பலகைகளில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும்.
மரம் அறுக்கும் இயந்திரம், ஜே.சி.பி., டார்ச்லைட் அனைத்து வாகனங்களிலும் இருப்பு வைக்க வேண்டும். ஜெனரேட்டர்கள், நீர் வெளியேற்றும் பம்புகள், சின்டெக்ஸ் டேங்க், தண்ணீர் லாரி, பிளிச்சிங் பவுடர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும்.
தீயணைப்புத் துறையினர் மற்றும் மக்கள் நலப்பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய வேண்டும். குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுப்பதுடன், குழாய் அருகே சாக்கடை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சாக்கடை மற்றும் சாக்கடை நீர் தேங்கும் இடங்களில் கொசு மற்றும் கிருமிகளை அழிக்க மருந்து தெளிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து மாற்று இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அலுவலகங்களில் தீயணைப்பு, காவல், மருத்துவம், ஊர்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒத்திகை பயிற்சி நடத்த வேண்டும்.
அலுவலகத்திலும், ஈப்பு வாகனங்களிலும் உள்ள VHF சாதனங்கள் நல்ல நிலையில் இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு தங்கும் மையங்களில் உள்ள பழுதுகளை உடனடியாக பொதுப்பணித் துறைக்குத் தெரிவித்து சரி செய்ய வேண்டும்.
அருகிலுள்ள சமுதாயக்கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் திருமண மண்டபங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்குரிய வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பட்டா வாரியாக பயிரிடப்பட்டுள்ள சாகுபடி பரப்புகளை கிராம அடங்கலில் பதிவு செய்து வேளாண்மைத் துறையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டதற்கான சான்றினை அனைத்து வருவாய் வட்டாட்சியர்களும் அளிக்க வேண்டும்.
பயன்பாட்டுக்குத் தகுதியற்ற, ஆபத்தான, பழுதடைந்த பள்ளி மற்றும் அரசு கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீச்சல் தெரிந்த நபர்கள், படகு உரிமையாளர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், வெள்ள நிவாரணப் பிரிவு 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தெரிவிக்க வேண்டும்.
கிராமக் குழுக்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்க வேண்டும். நிவாரணப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களை நேரடியாகத் தணிக்கை செய்து பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
பாலங்கள், சிறுபாலங்கள், சாலைகளில் மழையின் காரணமாக பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக சீர் செய்வதற்கும், போக்குவரத்து பாதிக்காத வண்ணம் ஜல்லி, மணல், சாக்குகள், சவுக்குக் கட்டைகள் ஆங்காங்கே இருப்பு வைக்க வேண்டும்.
சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான மின் அறுப்பான் கருவிகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கிராம மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள சாலையோரம் மழைக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய மரங்களின் அதிகப்படியான கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புல்டோசர் மற்றும் பொக்லைன் உரிமையாளர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களைப் பெற்றுத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போதிய அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது பள்ளியின் சாவிகளை வருவாய்த் துறையினர் கேட்கும் போது ஒப்படைக்க அறிவுறுத்த வேண்டும்.
பயன்பாட்டுக்குத் தகுதியற்ற, ஆபத்தான, உறுதியற்ற நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பணிகளுக்கு ஆற்றில் மணல் எடுப்பதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
தானியக் கிடங்குகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்.
தாழ்வான மற்றும் மழை நீர் புகும் நியாயவிலைக் கடைகளைக் கண்டறிந்து, மேடான இடத்தில் மாற்றி அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்.
மின்சார வாரியம் சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மின்கம்பி இணைப்புகளை உறுதி செய்வதுடன், மின் கம்பிகளுக்கு மேல் செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
மின்மாற்றிகள் நல்ல நிலையில் இயங்குவதை உறுதி செய்வதுடன், பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். தேவையான அளவு புதிய மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளைத் தயார்நிலையில் இருப்பு வைக்க வேண்டும்.
தென்மேற்கு மழை முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, போக்குவரத்துத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.