கடலூர் அருகே இன்று நடந்த கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து கருப்பு கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீரப்பாளையம் ஒன்றியம் சிலைபுரம் கிராமத்தில் நூற்றுக்குள் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .
இந்த கிராம மக்கள், தங்களை மேல வண்யூர், லால்புரம் மற்றும் வயலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுடன் பிரித்து வைத்திருப்பதால் எந்தவித அடிப்படை வசதிகளோ அல்லது அரசின் நலத்திட்ட உதவிகளோ தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, சிலைபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே இன்று கிராம சபை கூட்டத்தில் கருப்புக் கொடி ஏந்தி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.