கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், சி.என். பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த நிகழ்வில் மாணவ மாணவிகளிடம் உரையாடிய எஸ்.பி. ஜெயக்குமார், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வியிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் கூறினார்.
குறிப்பாக, "புகையிலை, மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை வாழ்க்கையில் உபயோகப்படுத்த மாட்டேன். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வேன். சாதிய பாகுபாடு பார்க்க மாட்டேன். நான் என் பெற்றோருக்கும், படித்த பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், சமூகத்துக்கும் சிறந்தவனாக இருப்பேன்" என காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்காக கடலூர் எஸ்.பி ஜெயக்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் அமுதா, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாணவ மாணவிகள் என பலரும் பங்கேற்றனர்.