/tamil-ie/media/media_files/uploads/2023/05/OPR-and-CVS.jpg)
ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் சி.வி.சண்முகம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்.பியாக அங்கீகரிக்கக் கூடாது என மக்களவை சபாநாயகரிடம் அ.தி.மு.க சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்ட மோதலில், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சேர்த்து, அவரது மகனும் தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது; சென்னை ஐகோர்ட் கருத்து
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்.பி ஆக அங்கீகரிக்கக் கூடாது என மக்களவை சபாநாயகரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது. எனினும், நீதிமன்ற வழக்குகளால் அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் இன்றி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை வழங்கினார். அதில், ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவரை அ.தி.மு.க உறுப்பினராக அங்கீகரிக்கக் கூடாது என மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் உறுதி அளித்தார் என்று கூறினார். இந்த மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், மக்களவையில் அ.தி.மு.க சார்பில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை ஏற்படும். ஏனெனில் 2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி ரவீந்திரநாத் ஆவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.