முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் அதிமுக மூத்தத் தலைவரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “நல்ல நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு முடிவெடுக்கப்படும்.
அந்த வகையில், விரைவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் வெளியிடுவார். மேலும், இருதரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமில்லாதது.
மேலும், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபரே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக இருப்பர்.
அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு என்பது இடைத்தேர்தலுக்கு மட்டுமான உத்தரவு என நீதிபதிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்” என்றனர். தொடர்ந்து வேட்பாளர் தேர்வு குறித்து பேசுகையில், “பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கடிதம் மூலம் பெற உத்தரவிட்டுள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/