தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (புதன் கிழமை) நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னையிலுள்ள வானிலை மைய இயக்குநா் பாலசந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சென்னைக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகா்ந்து வருகிறது. புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. டிச. 9 மாலை முதல் டிச. 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக டிச. 8 ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி பலத்த மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்.
டிச. 9 இல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி பலத்த மழையும், தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக் கடல், தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“