/indian-express-tamil/media/media_files/cD3JgDX5mnuM3mKTc4WF.jpg)
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முன் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக கிராமப் பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை, வனப் பகுதியில் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலே முகாமிட்டு உள்ளது.
மேலும் அடிக்கடி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும், விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிரிடப்பட்டு உள்ள பயிர்களையும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அதனை விரட்டும் விவசாயி மற்றும் பொதுமக்களை யானை தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது முதல் மனைவி உமா உடல்நிலை சரியில்லாமல் இறந்த பிறகு, இரண்டாவதாக திலகவதி என்பவருடன் திருமணமாகி கடந்த 11 வருடங்களாக நரசிபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கட்டிட வேலை மற்றும் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சூர்யா (25), திருமணம் முடிந்து குடும்பத்துடனும், இரண்டாவது மகன் குணசேகரன் (23) திருப்பூர் பகுதியில் வேலை செய்தும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரன் தனது வீட்டிற்கு முன்பு உள்ள கொடுக்காய்ப்புளி மரத்தடியில் பாய் விரித்து உறங்கிக் கொண்டு இருக்கும் போது, அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி வரும் சத்தம் கேட்டு எழுந்து யானையை பார்த்து பயந்து ஓடி உள்ளார்.
அவரை விரட்டி சென்று அந்த ஒற்றை காட்டு யானை சந்திரனை தந்தத்தால் முதுகில் குத்தி, காலால் மிதித்து உள்ளது. முதுகு, நெஞ்சுப் பகுதியில் ரத்தகாயம் ஏற்பட்டு சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானை கூலி தொழிலாளியை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.