தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தலித் சிறுவனை கைகளால் மலம் அள்ள வைத்து வன்கொடுமை செய்ததாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடி அள்ளி ஊராட்சி, கோடாரம்பட்டி கிராமம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் புதன்கிழமை இரவு (ஜூன் 15) மழை பெய்தபோது, இயற்கை உபாதை ஏற்பட அதே பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புதர் நிறைந்த மறைவான பகுதியில் மலம் கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த ராஜசேகர் தனது நிலத்தில் சிறுவன் மலம் கழித்துவிட்டார் என்று சாதி பெயரைச் சொல்லி திட்டி மலத்தை கைகளால் அள்ள வைத்து அடித்து துண்புறுத்தியுள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை, தனது மகனை சாதி பெயரைச் சொல்லி கைகளால் மலம் அள்ளவைத்து அடித்து துன்புறுத்திய ராஜசேகர் என்பவர் மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக, ராஜசேகர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, ராஜசேகரும் சிறுவனின் பெற்றோர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், பென்னாகரம் காவல் துறையினர் இந்திய தண்டனை சட்டம் எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலித் சிறுவன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரின் நிலத்தில் மலம் கழித்ததற்காக சிறுவனை கைகளால் மலம் அள்ள வைத்து அடித்து துன்புறுத்திய செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோடாரம்பட்டியில் கையால் மலம் அள்ள வைத்து வன்கொடுமைக்கு ஆளான தலித் சிறுவனை பென்னாகரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினருமான ந. நஞ்சப்பன், அக்கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ். தேவராஜன், செயற்குழு உறுப்பினர் எம். ஏ. காதர் உள்ளிட்டோர் சிறுவனை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"