பெருமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர். பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆச்சாள்புரம், மாதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பேரழிவு பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்து உள்ளதை நேரில் பார்வையிட்ட பின்னர் சீர்காழி அருகே மாதாளம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
காவிரி டெல்டாவில் பேரழிவு பெருமழையாள் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்திருக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் கிடைக்காததால் துவக்கம் முதலே பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளனர்.
பல இடங்களில் காய்ந்து விளைச்சல் இல்லாத நிலை உள்ளது. பெரும்பகுதியா நிலங்கள் குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்த தண்ணீரும் மழை நீரையும் பயன்படுத்தி சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் அழியத் தொடங்கி இருக்கிறது.சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையும் அழிந்துவிட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மற்றும் கதிர்வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவள்ளூர், விழுப்புரம் வரையிலும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறார்கள் எனவே தமிழ்நாடு முழுமையிலும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்தான கணக்கெடுப்பை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். அறுவடை நேரத்தில் பயிர்கள் அழிந்து உள்ளதால் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ஏக்கர் ஒன்றுக்கு இடுபொருள் இழப்பீடாக ரூபாய் 25000ம் வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உரிய காலத்தில் பெற்று தருவதற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கடந்த 2018 முதல் காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்கிற அதிகாரம் மாநில அரசு கையில் உள்ளது. இழப்பீடு சென்றடைவதை மாநில அரசுகள் கண்டிப்புடன் கண்காணித்திட வேண்டும்.
மத்திய மாநில அரசுகளுடைய பங்குத்தொகையை பெற்றுக் கொள்கிற காப்பீட்டு நிறுவனங்கள் பயனாளி பட்டியலை அரசுக்கு வழங்குகிறதே தவிர, அதற்கான இழப்பீட்டு தொகையை முழுமையாக வங்கிகளில் வரவு வைக்காமல் ஆண்டுதோறும் ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் காப்பீட்டுக்கான இழப்பீடு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்று பெற்றுக் கொடுக்கும் நிலை இருந்தது.
தி.மு.க ஆட்சி காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படும் நிலை உள்ளது என்பதை முதலமைச்சர் உணரவேண்டும். காப்பீடு திட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் தன் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் இடுபொருள் நிவாரணம் தொகை குறித்தாள விவரங்களையும், வருவாய் கிராமங்கள் தோறும் பயனாளி பட்டியலையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் மணிக்கொள்ளை ராமச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்ட கவுரவத் தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை, மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம், மாவட்ட அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கணேசன், சிதம்பரம் லட்சுமி காந்தன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆனந்த், நாகராஜ், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் முகேஷ், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.தெய்வமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.