ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை போலீஸ் கமிஷனராக இருந்தபோது, போலி ஆவணங்கள் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக வாராகி என்பவரால் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.
1995-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுரை நகர காவல் ஆணையராக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார். இவர் மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த காலக்கட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், அந்த பாஸ்போர்ட்டுகள் அவரது மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது குறித்த விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை கண்காணிக்க எஸ்.பி.சி.ஐ.டி, ஐஜி-க்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் தமிழக அரசுக்கு கடந்த மே மாதம் மனு அனுப்பியிருந்தார்.
மேலும், வாராகி இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜூலை 07) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு நற்சான்று வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மதுரையில் சம்பவம் நடந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? மதுரைக் கிளை ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நற்சான்று அளித்துள்ளதா?” என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜேந்திரன், மதுரை வரம்புக்கு உட்பட்ட வழக்குகளை சென்னையிலும் தாக்கல் செய்ய அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”