கோவையில் ஆணவக் கொலை செய்த வழக்கில் வினோத் குமார் என்பவருக்கு மரண தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக, கனகராஜின் அண்ணன் வினோத் குமார் என்பவர், தனது தம்பியையும் அவரது மனைவியான வர்ஷினி பிரியாவையும் ஆணவக் கொலை செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வினோத் குமார், கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வினோத் குமாரை குற்றவாளி எனக் கூறி தீர்ப்பளித்த நீதிமன்றம், மற்ற மூவரையும் விடுதலை செய்தது. மேலும், வினோத் குமாரின் தண்டனை விவரங்கள் ஜனவரி 29-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.
அதன்பேரில், இன்றைய தினம் வினோத் குமாருக்கான தண்டனை விவரங்களை கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதில், குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.