scorecardresearch

Tamil News Highlights: தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Latest News 21 March 2022- தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Highlights: தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, ரூ.102.16 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.19 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், தமிழ்நாட்டில், 5 மாதங்களுக்கு பிறகு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்து, ரூ. 967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


பட்ஜெட் மீதான விவாதம்

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது.

நம்ம ஊரு திருவிழா

சென்னை, தீவுத்திடலில் இன்று மாலை 6 மணி முதல் ‘நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.
பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு

ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்ற டிஜிபி சைலேந்திர பாபு, செல்லும் வழியில் உள்ள உச்சிபுளி C7-காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோப்புகள் அனைத்தும் சரியாக இருந்ததை அடுத்து, காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுத்தொகையினை அவர் வழங்கினார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் ‘அசானி’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

India update: மணிப்பூர் முதல்வராக பைரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அகதிகளாக 1 கோடி உக்ரேனியர்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அந்நாட்டில் இருந்து 1 கோடி பேர் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
21:46 (IST) 21 Mar 2022
மேகதாது திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு தீர்மானம் சட்டவிரோதமானது – கர்நாடக முதலமைச்சர்

மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்டவிரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்

20:25 (IST) 21 Mar 2022
மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர அனுமதி இல்லை

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மேலும், மாவட்ட வாரியாக எந்தெந்த வழித்தடங்களில் பள்ளி ,கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி செல்கின்றனர் என்ற விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது

20:10 (IST) 21 Mar 2022
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் கைது – போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் அன்னூர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

19:51 (IST) 21 Mar 2022
சீனாவில் பயணிகள் விமானம் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்

சீனாவில் ஏற்பட்ட பயணிகள் விமான விபத்துக்கு, பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

19:32 (IST) 21 Mar 2022
உலகம் முழுவதும் 99 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளது – லாவ் அகர்வால்

உலகம் முழுவதும் 99 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கவில்லை. கொரோனா தாக்கத்தில் இருந்து உயிர்களை காப்பாற்றுவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்

19:24 (IST) 21 Mar 2022
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு

கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

19:16 (IST) 21 Mar 2022
தொடங்கியது நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி

சென்னை தீவுத்திடலில், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அரசு சார்பில் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது

18:56 (IST) 21 Mar 2022
தமிழகத்தில் 9 நகரங்களில் சதம் அடித்த வெயில் வெப்பநிலை

தமிழகத்தில் 9 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு -102, திருச்சி – 105, வேலூர், திருத்தணி – 101, கரூர் பரமத்தி – 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சேலம், தஞ்சை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் வெயில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதன் மூலம், தமிழகத்தில் 9 நகரங்களில் வெயில் சதமடித்து கடுமையான வெப்பநிலை நிலவியது.

18:12 (IST) 21 Mar 2022
‘நீட்டை ஒழித்தால்தான் நவீனின் ஆத்மா சாந்தி அடையும்’ – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

நீ தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் உக்ரை-ரஷ்யா போரில் பலியான மருத்துவ மாணவன் நவீனின் ஆத்மா சாந்தி அடையும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட் செய்துள்ளார். நீட் தேர்வு காரணமாக இந்தியாவில் பல மாணவர்களின் கனவு நசுக்கப்பட்டு வெளிநாட்டில் உயிர் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

18:04 (IST) 21 Mar 2022
ஆறுமுகசாமி ஆணையத்தின் இன்றைய விசாரணை நிறைவு

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை மீண்டும் ஆஜராகும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணை நிறைவடைந்தது.

17:34 (IST) 21 Mar 2022
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது; மகள்கள் பெற்றுக்கொண்டனர்

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக்கொண்டனர்.

17:31 (IST) 21 Mar 2022
குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

17:17 (IST) 21 Mar 2022
தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி

தமிழகத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வை எழுதவுள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

16:51 (IST) 21 Mar 2022
ஓபிஎஸ் நாளையும் ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை மீண்டும் ஆஜராகும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு உத்தரவு. மின்தடை காரணமாக இறுதி நேரத்தில் விசாரணை நிறுத்தம்

16:41 (IST) 21 Mar 2022
“தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் – கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு என பிளாஸ்டிக் தடையை எதிர்த்த மறு ஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

16:33 (IST) 21 Mar 2022
மீண்டும் வருகிறது P.E.T வகுப்பு

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட உடற்கல்வி பாடவேளை மீண்டும் அமலுக்கு வருகிறது.

16:08 (IST) 21 Mar 2022
சிசிடிவி-யை அகற்ற நான் எதுவும் கூறவில்லை – ஓ.பி.எஸ்

அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை. சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கக் கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்

15:18 (IST) 21 Mar 2022
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன்? – ஓபிஎஸ் விளக்கம்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில், அண்ணா, எம்.ஜி.ஆர். போல சிகிச்சைக்கு ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், வேலுமணியிடமும் தெரிவித்தேன். விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்கள் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்வது குறித்து ராம் மோகன் ராவ் தன்னிடம் எதுவும் பேசவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்தார்.

15:08 (IST) 21 Mar 2022
“திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள்” – முதல்வர் விளக்கம்

திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.

14:35 (IST) 21 Mar 2022
இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரி மனு – வழக்கு தள்ளுபடி

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவை திரும்பப் பெற்ற நிலையில் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

13:56 (IST) 21 Mar 2022
ஜெயலலிதா உடல் நலம் குறித்து விஜயபாஸ்கர் மூலம் கேட்டு தெரிந்து கொள்வேன் – ஓ.பி.எஸ்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் அவரின் உடல்நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விசாரணை ஆணையத்திடம் பதில்

13:33 (IST) 21 Mar 2022
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13:32 (IST) 21 Mar 2022
முறைகேடு செய்தவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா – முதல்வர் கேள்வி

முறைகேடுகள் நடந்ததை ஆதரிக்கவில்லை. திமுக வாக்குறுதியை நம்பியே மக்கள் நகைக்கடன் பெற்றனர். தற்போது தகுதி அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேச நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக காரசார விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

13:00 (IST) 21 Mar 2022
துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டேன்!

மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து எனக்கு தெரியாது. பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில், விசாரணை ஆணைய கோப்பில் கையெழுத்திட்டேன் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

13:00 (IST) 21 Mar 2022
மதிமுகவை திமுக உடன் இணைப்பது குறித்து ஆலோசனை!

சிவகங்கையில், மதிமுகவை திமுக உடன் இணைப்பது குறித்து, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் மாவட்ட மதிமுக செயலாளர்கள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

13:00 (IST) 21 Mar 2022
10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி!

10 நாட்களுக்குள் 14.60 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

12:34 (IST) 21 Mar 2022
மேகதாது குறித்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது குறித்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. காவிரி விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என முதல்வராக இருந்தபோது பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது அணையால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்– ஈபிஎஸ்!

12:33 (IST) 21 Mar 2022
மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேறியது!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது குறித்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

11:56 (IST) 21 Mar 2022
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்.. கட்சிகள் ஆதரவு!

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இதுகுறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

11:56 (IST) 21 Mar 2022
ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம்!

”மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன். கடந்த 2014 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா உடல்நல குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார்”-ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம் அளித்தார்.

11:33 (IST) 21 Mar 2022
மேகதாது அணை.. மத்திய அரசு அனுமதிக்க கூடாது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது – அமைச்சர் துரைமுருகன்

11:27 (IST) 21 Mar 2022
சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம்!

சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளனர். காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது – துரைமுருகன்

11:26 (IST) 21 Mar 2022
பெரம்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள்!

பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்புகள் கட்டப்படுமா? என எம்.எல்.ஏ சேகர் எழுப்பிய கேள்விக்கு, பெரம்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்தார்.

11:26 (IST) 21 Mar 2022
ஜெயலலிதா மரணம்.. ஓபிஎஸ் நேரில் ஆஜர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஓபிஎஸ், இளவரசி நேரில் ஆஜர் ஆகினர்.

10:57 (IST) 21 Mar 2022
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க விசிக எம்.பி. திருமாவளவன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

10:47 (IST) 21 Mar 2022
அரசு சார்பில் 10 கல்லூரிகள்- அமைச்சர் பொன்முடி

அரசு சார்பில் 10 கல்லூரிகள், அறநிலைய துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவு துறை சார்பில் ஒரு கல்லூரி துவங்கப்பட உள்ளன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

10:43 (IST) 21 Mar 2022
புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை

திருப்பூரில் 3 முழு நேர கடைகள், 7 பகுதிநேர கடைகள் திமுக ஆட்சியமைத்த பின் தொடக்கம். அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

10:27 (IST) 21 Mar 2022
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார்.

10:25 (IST) 21 Mar 2022
இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயன்-முதல்வர்

இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது; சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.

10:08 (IST) 21 Mar 2022
தொடங்கியது சட்ட சபை

பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடத்துவதற்கான கூட்டத் தொடர் சட்டசபையில் தொடங்கியது.

10:07 (IST) 21 Mar 2022
15ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு சிலை மீட்பு

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்தவிருந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு சிலையை அதிகாரிகள் மீட்டனர்.

09:55 (IST) 21 Mar 2022
ஆளுநருடன் தமிழக பாஜக தலைவர் இன்று சந்திப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.

09:49 (IST) 21 Mar 2022
முதல்வரை சந்தித்த பூச்சி முருகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூச்சி முருகன்.

09:30 (IST) 21 Mar 2022
கிண்டியில் புதிய மருத்துவமனை-அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை, கிண்டியில் 1,000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ₨250 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டடம் அமையவுள்ளது.

09:27 (IST) 21 Mar 2022
பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள்

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

09:08 (IST) 21 Mar 2022
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 4.24 கோடி பேர்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

08:45 (IST) 21 Mar 2022
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

08:44 (IST) 21 Mar 2022
2ஆவது டோஸுக்கான கால இடைவெளியை குறைக்க ஆலோசனை

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2ஆவது டோஸுக்கான கால இடைவெளியை குறைக்க நோய் தடுப்பு தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு அறிவுறுத்தியுள்ளது.

08:38 (IST) 21 Mar 2022
கர்நாட உயர்நீதிமன்ற நீதிபதிகளு ஒய் பிரிவு பாதுகாப்பு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

Web Title: Debate on the budget in the tamil nadu assembly today