/indian-express-tamil/media/media_files/2025/09/10/school-leave-2025-09-10-08-30-26.jpg)
வட தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு மண்டலம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று (புதன்கிழமை) பிற்பகலில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாழ்வு மண்டலம் நாளை (வியாழக்கிழமை) மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் பின்னர் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதவிர, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரபிக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நீடிக்கிறது. இந்த காரணங்களால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 22, 2025) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
கன முதல் அதி கனமழை: விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கன முதல் மிக கனமழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
கனமழை: சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய மழை நிலவரம்
நாளை (அக்டோபர் 23, 2025) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (புதன்கிழமை) பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: சென்னை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us