தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நவம்பர் 09ம் தேதி வியாழக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எந்தெந்த இடத்தில் இருந்து என்னென்ன ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற முழு விவரம் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு இயக்கக்கூடிய 2,100 அரசுப் பேருந்துகளுடன் வியாழக்கிழமை முதல் நவம்பர் 9, 10, 11 ஆகிய 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
சென்னையில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் தீபாவளிக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. சென்னையில் எந்தெந்த இடத்தில் இருந்து என்னென்ன ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற முழு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா், பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதில் சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இ.சி.ஆா் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“